நியூயார்க் இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 10 பேர் காயம்

நியூயார்க் இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 10 பேர் காயம்
Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதன்கிழமை இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அமாசுரா என்ற இரவு கேளிக்கை விடுதிக்கு அருகே உள்ளூர் நேரப்படி இரவு 11:20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் சுமார் 10 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் கூடும் அந்த கேளிக்கை விடுதியில் இரவு நேர பார்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில்,நேற்று இரவு, மறைந்த பிரபல நபர் ஒருவரின் நினைவாக ஆயுதம் ஏந்திய கும்பலைச் சார்ந்தவர்கள் அந்தக் கேளிக்கை விடுதியில் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளனர். அப்போது இரவு 11.20 மணியளவில் கேளிக்கை விடுதியினுள் செல்வதற்காக காத்திருந்த 80-க்கும் மேற்பட்டோரின் மீது ஒரு கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நியூயார்க் போலீஸார் இதுவரை எந்த அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது தொடர்பான வீடியோவில், அந்த கேளிக்கை விடுதியில் போலீஸாரின் வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் இருப்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரிடம் விசாரித்து வருகின்றனர். அதோடு, இது பயங்கரவாத நிகழ்வு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in