Published : 16 Jun 2018 09:45 AM
Last Updated : 16 Jun 2018 09:45 AM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவிக்கு திடீர் மாரடைப்பு: லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்ஸும் நவாஸுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நவாஸ் ஷெரிப் மனைவி குல்ஸும் நவாஸுக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, குல்ஸூமுக்கு கடந்த புதன்கிழமை திடீர் மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதனைத் தொடர்ந்து, அதே மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றினர். அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குல்ஸூமை பார்ப்பதற்காக அவரது கணவர் நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் மரியம் ஆகியோர் நேற்று லண்டன் சென்றனர். வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், நவாஸ் ஷெரிபை பிரதமர் பதவியிலிருந்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்தது. இந்த வழக்கில் நவாஸ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x