தீபாவளி விருந்தில் அசைவம், மது: இந்துக்களிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்

தீபாவளி விருந்தில் அசைவம், மது: இந்துக்களிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்
Updated on
1 min read

லண்டன்: தீபாவளி விருந்தில் அசைவம் மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டது குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் அதிருப்தி தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்.29 அன்று லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் அசைவம் மற்றும் மதுவகைகள் பரிமாறப்பட்டன.

இதனையடுத்து பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.யும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஷிவானி ராஜா, தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். அதில், “இந்த ஆண்டு நிகழ்வின் ஏற்பாடு மிக மோசமாகப் இருந்ததாக நான் உணர்கிறேன். எனது சொந்தத் தொகுதியான லெய்செஸ்டர் கிழக்கில் ஆயிரக்கணக்கான இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இந்துவாக, இந்த கவனக்குறைவின் விளைவாக, அரசின் எதிர்மறையான தன்மையால் இந்த ஆண்டு விழா மறைக்கப்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தீபாவளி விருந்தில் அசைவம் மற்றும் மது பரிமாறப்பட்டது குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்புக் கோரியுள்ளது. “இந்த பிரச்சினையில் உணர்வின் வலிமையை நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்கிறோம். இது மீண்டும் நடக்காது என்றும் உறுதியளிக்கிறோம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in