லெபனான் பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு

லெபனான் பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு
Updated on
1 min read

லெபனானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் லெபனானில் நடந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அப்போது அந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் மவுனம் சாதித்துவந்தது. இந்நிலையில் முதன்முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நெதன்யாகு, லெபனான் பேஜர் தாக்குதல் தனது ஒப்புதலடனேயே நடந்ததாக தெரிவித்தார். இதனை நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஒமர் டோஸ்ட்ரி உறுதி செய்தார்.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாகு லெபனான் தாக்குதல் பற்றி வெளிப்படையாகப் பேசியது கவனம் பெற்றுள்ளது. பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலும் தான் ஒப்புதல் வழங்கிய பின்னரே நடந்ததாக நெதன்யாகு கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து அவருடன் 3 முறை பேசிவிட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களில் எதிர்ப்பை மீறி பேஜர் நடவடிக்கை மற்றும் ஹசன் நஸ்ரல்லா மீதான தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பணயக்கைதிகளை காசாவிற்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து போர் தொடங்கியது. காசாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த போரில் 43,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக மாறிவிட்டன.

இதன் நீட்சியாக தற்போது லெபனான் எல்லைக்குள் உள்ள ஈரானிய ஆதரவு கொண்ட ஹெஸ்புல்லாக்களை அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து நடவடிக்கையில் இறங்கியது.

கடந்த செப்டம்பர் மாதம், லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறிய நிகழ்வு மத்தியகிழக்கை மட்டும் அல்ல, மொத்த உலகையும் உலுக்கி எடுத்தியது. பின்னர் வாக்கி டாக்கிகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் என களமிறங்கியது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துவிட்டது. காயமடைந்தோர் எண்ணிக்கை 13,000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் தான் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்கள் தனது ஒப்புதலுடனேயே நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in