‘இந்தியா - இஸ்ரேல் நட்பின் சாம்பியன்’ - ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் நெதன்யாகு இரங்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஜெருசலேம்: இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தியா - இஸ்ரேல் இடையேயான நட்பின் சாம்பியனாக டாடா திகழ்ந்தார்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (86) புதன்கிழமை இரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து நெதன்யாகு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா - இஸ்ரேல் உறவுக்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது பதிவில், “எனது நண்பர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவின் பெருமைமிகு மகனும், நமது இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்பின் உண்மையான சாம்பியனான ரத்தன் நாவல் டாடாவின் மறைவை ஒட்டி நானும், இஸ்ரேலிய மக்களும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரியப்படுத்துங்கள். அனுதாபத்துடன், பெஞ்சமின் நெதன்யாகு" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வியாழக்கிழமை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும், "டாடா எங்கள் நாட்டின் உண்மையான நண்பன்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ரத்தன் டாடா மறைவுக்கு வெள்ளிக்கிழமை தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார். மேலும் இந்தியா பிரான்ஸில் தொழில்களை வலுப்படுத்துவதில் அவரின் பங்களிப்புகளை பாராட்டியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in