Published : 20 Jun 2018 08:25 AM
Last Updated : 20 Jun 2018 08:25 AM
உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளன என்று ஐ.நா. சபை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஐ.நா. சபை சார்பில் பாதுகாப்புத் துறை நிபுணர் ஆரோன் கார்ப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2017 புள்ளிவிவரங்களின்படி உலகளாவிய அளவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களிடம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளன. இதில் பொதுமக்களிடம் மட்டும் 85.7 கோடி துப்பாக்கிகள் உள்ளன. ராணுவ வீரர்கள் 13.3 கோடி துப்பாக்கிகளையும் போலீஸார் 2.27 கோடி துப்பாக்கிகளையும் பயன்படுத்துகின்றனர்.
சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பொதுமக்களில் அதிகமானோர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 39.3 கோடி மக்களிடம் துப்பாக்கி உள்ளது. அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியர்களிடம் சுமார் 7.11 கோடி துப்பாக்கிகள் உள்ளன. சீனர்களிடம் 4.97 கோடி துப்பாக்கிகள், பாகிஸ்தானியர்களிடம் 4.39 கோடி துப்பாக்கிகள், ரஷ்யர்களிடம் 1.76 கோடி துப்பாக்கிகள் உள்ளன.
எந்தெந்த நாடுகளின் ராணுவத்தில் துப்பாக்கிகள் அதிகம் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. சீனா, வடகொரியா, உக்ரைன் ஆகியவை அடுத்தடுத்த நிலையில் உள்ளன. அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது.
இதேபோல எந்த நாட்டு போலீஸாரிடம் அதிக துப்பாக்கிகள் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. சீனா, இந்தியா, எகிப்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT