

எத்தியோப்பியாவில் அந்நாட்டு பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”எத்தியோப்பியா பிரதமர் அபி அகமத் பேரணி ஒன்றில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டார். இந்தப் பேரணியில் அபி பேசி முடித்தவுடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஆறு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பு குறித்து அபி, ”எத்தியோப்பியர்களின் ஒற்றுமையை சீரழிப்பதற்காக நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு இது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, எத்தியோபியா பிரதமர் ஹெலிமரியம் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து எத்தியோப்பியா பிரதமராக அபி அகமத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அபி பிரதமராக தேந்தெடுக்கப்பட்டது முதல் பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தார். முடக்கப்பட்ட ஏராளமான டிவி சேனல்கள், இணையதளங்கள் மீதான தடையை நீக்கினார்.
மக்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக வளர்ந்து வரும் அபி எதிராக இந்தக் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.