இலங்கை முன்னாள் அதிபர்களின் சலுகைகளை குறைக்க புதிய அதிபர் திசாநாயக்க நடவடிக்கை

இலங்கை முன்னாள் அதிபர்கள் சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனா, கோத்தபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க | கோப்புப்படம்
இலங்கை முன்னாள் அதிபர்கள் சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனா, கோத்தபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க | கோப்புப்படம்
Updated on
1 min read

இலங்கை: இலங்கையின் முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளை குறைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் கட்சி (ஜேவிபி)யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். அநுர குமார திசாநாயக்க தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முந்தைய இலங்கை அரசாங்கங்களில் புரையோடியிருந்த ஊழல், வீண் விரயம், மோசடி முறைகேடுகளுக்கு எதிராகவும், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்ட புதிய சட்டங்கள் உள்ளிட்ட 23 உடனடி மாற்றங்களை அமல்படுத்துவேன் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் அடங்கிய அமைச்சரவை கூட்டம் நேற்று (செப்.30) திங்கட்கிழமை மாலை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செவ்வாய்கிழமை (அக்.1) அதிபரின் செயலகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

14.11.2024 அன்று நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான தேவையான நிதி ஒதுக்கீடு, அதிபரின் ஆலோசகர்கள், அமைச்சரவை பேச்சாளர், அரசின் செய்தித் தொடர்பாளர், குடியுரிமை தலைமை அதிகாரி நியமனம் ஆகியவற்றுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அதிபர்கள் ஆகியோருக்கான மாதந்திர சம்பளம், கொடுப்பனவு. ஓய்வூதியம், வீடு, வாகனங்கள், பணியாட்கள், அலுவலக உபகரணங்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதுள்ள அரசு நிதியில் அதிகளவிலான செலவுகளைக் குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், அதற்கேற்ப, முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளை குறைப்பதற்கும் மற்றும் மாற்று முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சித்திரசிறி தலைமையிலான குழுவை அமைச்சரவை கூட்டத்தில் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழு இரண்டு மாதங்களில் அறிக்கையை அதிபரிடம் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள அமைச்சர்கள் பெறக்கூடிய அனைத்து வகையான சலுகைகளையும் இலங்கையின் முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க. மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனா, கோத்தபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்படும் சலுகைகள் பெருமளவில் குறைக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in