Published : 29 Jun 2018 01:10 PM
Last Updated : 29 Jun 2018 01:10 PM
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக ட்ரம்ப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து பெண்களுடன் சென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய வம்சாளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 1940 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கு அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு வலுத்ததால் குழந்தைகளைப் பெற்றோரிடம் சேர்க்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக 100 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு நியூ மெக்ஸிகோ மற்றும் ஒரிகானில் உள்ள மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அடைக்கலம் தேடிவருவோருக்கு எதிராக டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய வம்சாளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர். பிரமிளா ஜெயபால் கூறுகையில் ‘‘தஞ்சமாக அமெரிக்காவுக்கு வரும் அகதிகளை கொடுமை படுத்துவதையும், அவர்கள் குழந்தைகளை தனியாக பிரித்து வேறு இடத்தில் அடைப்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்கா முழுவதும் உள்ள பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் அரசுக்கு எதிராக பேராட்டம் நடத்தினோம். எங்களை அவர்கள் கைது செய்துள்ளனர். இருப்பினும் எங்கள் போராட்டம் தொடரும். ஜூன் 30-ம் தேதி பெரிய அளவில் ஒத்துழையாமை போராட்டம் நடத்த உள்ளோம்’’ எனக் கூறினார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு தேர்ந்தெடுகப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் பிரமீளா ஜெயபால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT