Published : 06 May 2018 05:14 PM
Last Updated : 06 May 2018 05:14 PM
ஜப்பானில் காளைகள் மோதும் மைதானத்திற்குள் அதனை கட்டுப்படுத்துவதற்காக முதன்முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அந்நாட்டில் மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிலும் ஆண்டுதோறும் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெறுகிறது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிபோல அல்ல. மாறாக, போட்டி நடைபெறும் சண்டை வளையத்திற்குள் இரண்டு காளை விடப்பட்டு மோத வைக்கப்படும். மாடுகளை உற்சாகப்படுத்தி அதனை மோத வைக்க காளைகளின் பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
காளைகள் கடுமையாக மோதிக் கொள்ளும் என்பதால் உள்ளே செல்லும் பயிற்சியாளர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆண்கள் மட்டுமே போட்டி நடக்கும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதுவம் சரியான பயிற்சி உடையவர்கள், உடல் திறன் உடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில் முதன்முறையாக மைதானத்தி்ற்குள் பெண் பயிற்சியாளர்கள் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். யாமகோஷி மாவட்டத்தில் நடைபெற்ற டோக்யு போட்டியில் யுகி என்ற பெண் போட்டி நடந்த மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். முன்னதாக காளைகளை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பாக நடந்து கொள்ளவும் உரிய பயிற்சி பெற்றுள்ளார்.
காளைகள் மோதும் மைதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது ஜப்பானில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜப்பானில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்படுவதில்லை என்ற புகார் உள்ளது. பல துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கம் இருப்பதாக கூறி பெண்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் காளைகள் மோதும் மைதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதை அநாட்டில் பல தரப்பனரும் வரவேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT