Last Updated : 04 May, 2018 02:54 PM

 

Published : 04 May 2018 02:54 PM
Last Updated : 04 May 2018 02:54 PM

இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கும் இல்லை: 75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தக் காரணம் என்ன?

 

உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 2018-ம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்துள்ளது.

பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு விருது வழங்குவதும், தேர்வு செய்யப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த 75ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகெடமியின் நிரந்தர செயலாளர் ஆன்டர்ஸ் ஆல்ஸன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகெடெமியில் உள்ள உறுப்பினர்கள் பலரும் தற்போது நிலவும் சிக்கல், பிரச்சினைகள் குறித்து அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். நீண்டகால நோக்கில் சில மாற்றங்களைச் சேர்க்கை எழுந்துள்ளது.

புதிய நோபல் பரிசபெறுபவர்களை அறிவிக்கும் முன் மக்களிடம் இழந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்பது மிகவும் அவசியமாகிறது. பொதுமக்களின், நோபல் அறக்கட்டளையின், எதிர்கால பரிசு பெறுபவர்கள், கடந்த காலத்தில் பரிசு பெற்றவர்கள் ஆகியோரின் மரியாதையை கேள்விக் குறியாக்கி இருக்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

18 பேர் கொண்ட நோபல் பரிசு தேர்வாளர்கள் குழுவில் இருக்கும் உறுப்பினரும், கவிஞருமான காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் ஒரு புகைப்படக்கலைஞர். பிரெஞ்சு நாட்டவரான இவர் மீது 18 பாலியல் புகார்கள் எழுந்தன. மேலும், நோபல்பரிசு அறிவிக்கும் முன்பே அவர்களின் பெயர்களை வெளியிட்டதாகப் புகார்களும் எழுந்தன. இது குறித்து ஸ்வீடன் நாளேடுகளில் கடந்த நவம்பர் மாதமே செய்தி வெளியானது.

ஆனால், இதை அர்னால்ட் மறுத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று காத்தரீனா பிராஸ்டென்சன் பதவி விலகக் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், அவர் மறுக்கவே, எதிர்ப்புத் தெரிவித்து உறுப்பினர்கள் குழுவில் உள்ள 3 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்.

கடந்த மாதம் 12-ம் தேதி இந்தப் புகார்கள் அனைத்தும் வெளியே பகிரங்கமானதால், கடும் எதிர்ப்புக் கிளம்பியது, தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. இதின் காரணமாக அகடமியின் நிரந்த செயலாளர் சாரா டேனியஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், நோபல் பரிசு அகடமிக்கு எதிராக ஸ்வீடன் முழுக்க பெரும் போராட்டம் வெடித்தது.

இதன் காரணமாக 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 2019-ம் ஆண்டுடன் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியப் பெருமை

நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பர்ட் நோபல் மரணத்துக்குப் பின்பு அவரின் பெயரில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்கும்ஸ இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்கப்படுகிறது.

இதற்காக நோபல் தனது சொத்துக்களைத் தானமாக அளித்தார். கடந்த 1901 முதல் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.1905-ம் ஆண்டு சுவீடனில் இருந்து நார்வே பிரிந்தது. அதனால், அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே வழங்க ஏற்பாடானது. 1968-ல் சுவீடன் மத்திய வங்கி ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து, நோபலின் பெயரில் பொருளாதார அறிவியலுக்கான பரிசை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் 200 பேர் இந்த நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர். அவர்களின் பெயர்கள் அனைத்தும் 18 பேர் கொண்ட நோபல் பரிசுக்குழுவால் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் ஆலோசிக்கப்பட்டு மே மாதம் பரிசுகள் அறிவிக்கப்படும். அந்தவகையில் இந்த மாதம் பரிசுகள் அறிவிக்கப்பட வேண்டும் ஆனால், பாலியல் சர்ச்சை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டதா?

நோபல் பரிசு வழங்கத் தொடங்கியதில் இருந்து பாலியல், நிதிமோசடி ஆகிய காரணங்களால் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை. ஆனால், முதலாம், 2-ம் உலகப்போரின் போது பரிசுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 1914, 1918, 1935, 1940, 1941, 1942, மற்றும் 1943 ஆகிய ஆண்டுகளில் நோபல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x