Published : 24 May 2018 08:54 AM
Last Updated : 24 May 2018 08:54 AM

மாயமான விமானத்தை தேடும் பணியை நிறுத்த முடிவு: மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி அடுத்த வாரத்துடன் நிறுத்திக் கொள்ளப்படும் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று எம்ஹெச் 370 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. 239 பயணிகளுடன் சென்ற அந்த விமானம், இந்தியப் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.

இதையடுத்து, விமானத்தைத் தேடும் பணியில் மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. பல கோடி டாலர்கள் செலவிட்டபோதிலும், விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, காணாமல் போன கப்பல்கள், விமானங்களைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற ‘ஓஷன் இன்பினிட்டி’ என்ற அமெரிக்க நிறுவனத்துடன் முந்தைய மலேசிய அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, விமானத்தைக் கண்டறிந்தால், அந்நிறுவனத்துக்கு மலேசிய அரசு ரூ.478 கோடி வழங்க வேண்டும்.

கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த போதிலும், மாயமான விமானத்தை அந்நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்தத் தேடும் பணி அடுத்த வாரம் முழுமையாக நிறுத்திக் கொள்ளப்படும் என்று மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் நேற்று அறிவித்தார். இதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தேடுதல் பணி முடிவுக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x