Published : 31 May 2018 08:41 AM
Last Updated : 31 May 2018 08:41 AM

இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று வடகொரியா செல்கிறார் ரஷ்ய அமைச்சர்

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இன்று வடகொரியா செல்கிறார்.

அணுஆயுதம், ஏவுகணைகளைச் சோதனை நடத்திய வடகொரியா மீது, ஐ.நா., அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் ஒருவரை ஒருவர் அழித்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

தென் கொரியாவின் தீவிர முயற்சியால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டார். ஜூன் 12-ம் தேதி இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்து அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேச முடிவானது.

திடீரென பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். எனினும் 2 நாட்கள் கழித்து கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசுவது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறினார். இந்நிலையில், ட்ரம்ப் - கிம் சந்திப்பு கேள்விக் குறியாகவே உள்ளது.

இந்தச் சந்திப்புக்கு முன்னர் வடகொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்குப் பதில் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், அணு ஆயுதங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டால், அமெரிக்காவால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று வடகொரியா அஞ்சுகிறது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று வடகொரியா செல்கிறார். அங்கு பியாங்யாங் நகரில் வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோவைச் சந்தித்து அணுசக்தி திட்டங்கள், இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யாங் ஹோ, கடந்த மாதம் மாஸ்கோவில் லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x