கென்யா வன்முறை: இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நைரோபி: கென்யாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை போராட்டம் காரணமாக இந்த அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரியை உயர்த்த வழிவகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து கென்ய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

செவ்வாய்க்கிழமை மதியம் பாராளுமன்ற வளாகத்தில் நுழைந்து போராட்டம் மேற்கொள்ள முயன்றவர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் சுமார் 31 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல். வரி உயர்வு தொடர்பான மசோதா காரணமாக அந்த தேசம் முழுவதும் மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘7 டேஸ் ஆஃப் ரேஜ்’ என போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கென்யாவில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் யாரும் வெளிவர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்தடுத்த அப்டேட் தகவல்களை பெற மக்கள் இந்தியத் தூதரகத்தின் வலைதளம், சமூக வலைதள பதிவுகளை ஃபாலோ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகத்தின் தரவுகளின்படி சுமார் இருபதாயிரம் இந்தியர்கள் கென்யாவில் இருப்பதாக தகவல்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in