Published : 15 May 2018 07:24 AM
Last Updated : 15 May 2018 07:24 AM
ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது இஸ்ரேல் படைகள் தாக்கியதில் 41 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்து ஏற்பாடுகளைச் செய்தது. அதற்கு முன்பு வரை அமெரிக்கத் தூதரகம் டெல் அவிவ் நகரில் இயங்கி வந்தது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இல்ரேல் - காசா எல்லைப் பகுதியில் சுமார் 35,000 பாலஸ்தீனர்கள் நேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கினர்.
இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், பாலஸ்தீனர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு போராட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,900 பேர் காயமடைந்த பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மட்டுமல்லாமல் கண்ணீர் புகைக்குண்டுகள், சிறிய ரக வெடிகுண்டுகளையும் பாதுகாப்புப் படையினர் வீசினர்.
முன்னதாக நேற்று காலை கிழக்கு ஜெருசலம் நகரில் அமெரிக்க தூதரகம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளால் திறந்து வைக்கப்பட்டது.
ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் திறக்கக்கூடாது என்று கடந்த மார்ச் 30-ம் தேதி முதலே பாலஸ்தீனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை ஒடுக்க, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மார்ச் 30 முதல் நடந்த போராட்டங்களில் இதுவரை 90 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். சுமார் 10,500 பேர் காயமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT