Last Updated : 14 Apr, 2018 03:13 PM

 

Published : 14 Apr 2018 03:13 PM
Last Updated : 14 Apr 2018 03:13 PM

சிரியா மீது போர் விமானங்கள் குண்டுமழை; தாக்குதலில் இறங்கிய அமெரிக்க கூட்டுப்படை ராணுவம்: டிரம்ப் அதிரடி உத்தரவு

 சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதனால் டமாஸ்கஸ் நகரமே ஒரே புகை மண்டலமாகவும், கட்டிடக் குவியல்களாகவும் காட்சி அளிக்கிறது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர். இந்த மூன்று தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிழக்கு கட்டா பகுதியில் இருந்த டூமா நகரை சிரியா அரசுப் படைகள் கடந்த வாரம் மீண்டும் கைப்பற்றின. இந்த கைப்பற்றலின்போது, கடந்த 7-ம் தேதி சந்தேகத்திடமான வகையில் ரசாயன குண்டுகளை வீசி சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, சிரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா ரசாயான ஆயுதத் தாக்குதலை தடுக்கவில்லை, ஆதரவாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். சிரியாவில் உள்ள ரசாயான ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அறிவித்திருந்தார்.

அழிக்கும் வரை தாக்குதல்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பர் நேற்று இரவு வெள்ளைமாளிகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், அவர் கூறியதாவது:

சிரியாவில் ஆபத்து மிகுந்த ரசாயான ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளன, தயாரிக்கப்படுகின்றன. இவற்றை அழிக்கும்வரை அமெரிக்க ராணுவம் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்.

இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தோடு, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து செயல்படும். டூமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது மனிதர்கள் செய்யக்கூடியதல்ல, அது கொடிய தீயசக்திகள் செய்யத்தக்கவை.

சிரிய அரசிடம் இருக்கும் ரசாயான ஆயுதங்களை அழிக்கும் வரை அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடங்கள், தயாரிக்கும் இடங்கள், விஷ வாயுக்கள் வைக்கப்பட்டு இருக்கும் இடங்களை நோக்கி இருக்கும்.

அமெரிக்க விமானங்கள் சக்திவாய்ந்த பி-1 போர் விமானங்கள், ஏவுகணை வீசும் கப்பல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை

சிரியா மீது நடத்தும் இந்தத் தாக்குதலில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடாது. சிரியாவுக்கு ஆதரவாகவும் களமிறங்கக்கூடாது என்று எச்சரிக்கிறேன். குழந்தைகளையும், அப்பாவி மக்களையும் விஷ வாயு மூலம் கொன்று சிரியாவின் அதிபர் மிருக அசாத்துக்கு பின்புலமாக இருக்கும் ரஷியாவும், ஈரானும் ஒரு காரணம்.

இவ்வாறு டிரம்ப் அறிவித்தார்.

குண்டுமழை

afpjpgடமாஸ்கஸ் நகரில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட காட்சி100 

அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோரும் அறிக்கை வெளியிட்டனர். தங்கள் நாட்டுப் படைகளும், அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும் என்றுஅறிவித்தனர்.

இதையடுத்து, சிரியாவின் டமாஸ்கஸ் நகர் மீது அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ராணுவ போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

இதுவரை டமாஸ்கஸ் நகர் மீது 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டாமாஸ்கஸ் நகரமே புகை மண்டலமாகவும், குண்டுகள் வெடித்து சிதறும், காதைப் பிளக்கும் ஒலியும் கேட்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x