Published : 06 Apr 2018 08:38 AM
Last Updated : 06 Apr 2018 08:38 AM
இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இந்த இரு கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு எதிராக ராஜபக்ச தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 122 எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராகவும் 76 எம்.பி.க்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால், ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மையினர் கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை ரணில் அமைக்கக் கூடும் என கூறப்படுகிறது. அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்த சிறிசேனா கட்சி அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT