இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் தகவல்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

காசா: இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் அல்- கஸ்ஸாம் ஆயுதப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேலிய ராணுவம் டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய நகரங்களில் ராக்கெட்டுகள் அச்சுறுத்தலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கவிட்டது.

ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப்பிரிவான அல்-கஸ்ஸாம் ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களுக்கு எதிரான சியோனிசப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட்டுகள் காசாவில் இருந்து ஏவப்பட்டதாக ஹமாஸின் அல் அகுஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலுக்கான சைரன்கள் எதுவும் கேட்கவில்லை. இந்த நிலையில், இன்று சைரன் ஒலித்ததற்கான காரணத்தை இஸ்ரேல் ராணுவம் உடனடியாக தெரிவிக்கவில்லை. அதேபோல், இஸ்ரேலின் அவசர மருத்துவ சேவை பிரிவு தங்களுக்கு உயிரிழப்புகள் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழி தாக்குதலின் பேரழிவுகளை தாங்கி வந்த நிலையில், காசாவால் இன்னும் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவும் திறன் இருக்கிறது என்பதை இந்த தாக்குதல் உணர்த்துகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in