Last Updated : 02 Apr, 2018 12:12 PM

 

Published : 02 Apr 2018 12:12 PM
Last Updated : 02 Apr 2018 12:12 PM

சீனாவின் ‘டியான்காங்-1’ விண்வெளி நிலையம் பசிபிக்கடலில் விழுந்து நொறுங்கியது

2011-ம் ஆண்டு சீனா அனுப்பிய ‘சொர்க்கத்தின் அரண்மனை’ என்று அழைக்கப்படும் டியான்காங்-1 விண்வெளி நிலையம், இன்று பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது என்று சீனா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் நீள் சுற்று வட்டப் பாதைக்குள் மீண்டும் இந்த விண்வெளி நிலையம் நுழைய முயன்றபோது, இந்திய நேரப்படி காலை 5.45 மணிக்கு பசிபிக் கடலில் விழுந்து. வானில் இருந்து கீழே விழும்போதே விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் ஏறக்குறைய எரிந்து சாம்பலாகிவிட்டன.

2023-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளி நிலையம் அமைக்கும் நோக்கில், அதற்கு முன்னோட்டமாக 2011-ம் ஆண்டு சீனா டியான்காங்-1 என்ற விண்வெளி மையத்தின் மாதிரியை அனுப்பியது.

இந்த விண்வெளி ஓடத்தின் மூலம் பல்வேறு ஆய்வுகளையும், தனது நிரந்தர விண்வெளி மையத்தை அமைக்கும் பணிகளையும் சீனா செய்து வந்தது. 34 அடி நீளம் கொண்ட இந்த விண்வெளி ஓடம், சீனாவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் முக்கியமானதாக இருந்தது.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு டியான்காங் விண்வெளிநிலையம் சீனாவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்து்டன் தொடர்பை இழந்துவிட்டது. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்த இந்த விண்கலம் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழைய முயன்றபோது, பிரேசில் கடற்பகுதியில் உள்ள பசிபிக் கடலில் விழுந்தது.

சா போலா, ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களுக்கு அருகே இருக்கும் கடல்பகுதியில் இந்த விண்கலத்தின் உடைந்த பாகங்கள் காணப்படுகின்றன.

இதுகுறித்து சீன விண்வெளி மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த 2011ம் ஆண்டு சீனா அனுப்பிய டியான்காங் விண்கலம் பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழைய முயன்றபோது, ஏப்ரல் 1-ம் தேதி

பசிபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. குட் பை டியான்காங், யூ ஆர் ஹீரோ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இந்த டியான்காங்-1 விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு செயல் இழக்கவைக்கப்பட்டு, அழிக்கப்பட இருந்தது. ஆனால், இந்த விண்கலம் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால், 2016ம் ஆண்டுக்கு பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் நொறுங்கி இருக்கிறதா?

நாசா முதன்முதலாக ஸ்கைலேப் எனும் விண்வெளி நிலையத்தை அனுப்பியது, அது, கடந்த கடந்த 1979-ம் ஆண்டு பூமியில் விழுந்து நொறுங்கியது ஆனால், அப்போது யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

அடுத்ததாக 2001-ம் ஆண்டு ரஷியா அனுப்பி 135 டன் எடை கொண்ட மிர் ஸ்பேஸ் விண்வெளி நிலையம் விழுந்து நொறுங்கியது.

உடைந்த பாகங்கள் மனிதர்கள் மீது விழுந்திருக்கிறதா?

இதற்கிடையே கடந்த 1996-ம் ஆண்டு அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் உள்ள டஸ்லா பகுதியில் லோட்டி வில்லியம்ஸ் என்ற பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, விண்வெளியில் இருந்து விழுந்த டெல்டா 2 ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் வில்லியம்ஸின் தோள்பட்டையில் விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x