ஈரான் பிடியில் இருந்த 16 இந்தியர்கள் உள்ளிட்ட 24 மாலுமிகள் விடுவிப்பு

எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பல்
எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பல்
Updated on
1 min read

புதுடெல்லி: சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி தரும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, கடந்த மாதம் 13-ம் தேதி ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பல் வந்தபோது, அதை ஈரான் சிறைபிடித்தது.

அதில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் பயணித்தனர். இதைத் தொடர்ந்து ஈரானின் பிடியில் இருந்த இந்திய மாலுமிகளை மீட்பதற்காக ஈரானுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.

பேச்சுவார்த்தையின் பலனாக, ஒரே ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார். இந்நிலையில் கப்பல் சிறைபிடிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு 16 இந்திய மாலுமிகள் உள்பட கப்பலில் இருந்த 24 பேரையும் ஈரான் நேற்று விடுவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமிராப்தொல்லா ஹியான் கூறும்போது, ‘‘இஸ்ரேலுக்குத் தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக் கப்பட்டு விட்டனர்.

மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in