Published : 28 Aug 2014 10:00 AM
Last Updated : 28 Aug 2014 10:00 AM

அதிக நிதி உதவி பெறும் தீவிரவாத அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்

சமீபகாலத்தில் 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் லுவன்ட்' எனும் தீவிரவாத அமைப்பு அதிகளவில் நிதி பெறும் அமைப்பாக உள்ளது என்றும், இந்த அமைப்பை `நாடுகடந்த குற்றவியல் அமைப்பு' என அறிவிக்கவும் அமெரிக்க செனட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாப் கேசி மற்றும் மார்கோ ரூபியோ ஆகிய இரண்டு செனட்டர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

"ஆயுத பலம், தாக்குதல் தளங்கள் உள்ளிட்ட பல வளங்களைக் கொண்டுள்ளது இந்த அமைப்பு. இந்த அமைப்பு அதன் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. வழிப்பறி, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றின் மூலம் இந்த அமைப்புக்கு அதிக அளவில் நிதி சேர்கிறது.

சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் நிதி பெறுவது மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுடன் நட்பில் உள்ள நாடுகளில் உள்ள தனி நபர்கள் மூலமாகவும் இவர்களுக்கு நிதி சேர்கிறது. மேலும், இதனுடன் உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் பலர் கை கோர்த்து சண்டையிடுகிறார்கள்.

இராக்கில் இதன் கீழ் உள்ள எண்ணெய்க் கிணறுகள் மூலம் சுமார் 2 மில்லியன் (சுமார் ரூ.20 லட்சம்) அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த அமைப்பை ஒடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அந்த அமைப்புக்குக் கிடைக்கும் வளங்களையும் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த அமைப்புக்கு நிதி அளிக்கும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்காவில் மட்டுமல்லாமல் நம் நட்பு நாடுகளிலும் அறிவிக்கச் செய்ய வேண்டும். தவிர, இந்த அமைப்பை `நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக'வும் அறிவிக்க வேண்டும்".

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x