ஏழை மாணவர்களுக்கான அன்னதான உணவை சாப்பிட்ட சர்ச்சை: கனடா வாழ் இந்திய வம்சாவளியின் வங்கி வேலை பறிபோனது

மெஹுல் பிரஜாபதி
மெஹுல் பிரஜாபதி
Updated on
1 min read

டோரன்டோ: கனடா நாட்டின் டிடி வங்கியில் தகவல் விஞ்ஞானியாக பணியாற்றிவந்தவர் இந்திய வம்சாவளி மெஹுல் பிரஜாபதி. மளிகைப் பொருட்களுக்கான செலவை குறைப்பது குறித்து விளக்கும் காணொலியை அண்மையில் வெளியிட்டார். அந்த காணொலியில் மெஹுல் கூறியதாவது:

கனடாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கிட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளைகளும், தேவாலயங்களும் உணவு வங்கிகள் நடத்துகின்றன.

இங்கிருந்து ஒருவாரத்துக்கான பழங்கள், காய்கறிகள், ரொட்டித்துண்டுகள், சாஸ், பாஸ்டா மற்றும் பெட்டியில் அடைக்கப்பட்ட காய்கறிகளை இதோ இதுபோல் இலவசமாக பெற்று வருகிறேன். இதனால் எனக்கு மாதாமாதம் பல நூறு ரூபாய் மிச்சமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வீடியோவை ’எக்ஸ்’ தளத்தில் வேறொருவர் பகிர்ந்து, “இந்த நபர் 98 ஆயிரம் டாலர் ஆண்டு வருமானம் அளிக்கும் டிடி வங்கியில் டேட்டா சைன்ட்டிஸ்டாக பதவி வகித்துக் கொண்டு கருணை அடிப்படையில் அன்னதானம் செய்யும் அமைப்புகளிடமிருந்து எவ்வளவு இலவச உணவை எடுத்து வருகிறார் என்பதை பெருமையாக காட்டும் வீடியோவை பதிவிட்டுள்ளார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் மெஹுல் பிரஜபதியின் காணொலி சர்ச்சையை கிளப்பியது. ஏழைகளுக்கும் தேவைஇருப்பவர்களுக்கும் கொடுக்கப்படும் உணவை கை நிறைய சம்பளம் பெறும் ஒருவர் பொய் சொல்லி வாங்கி சாப்பிடுதல் இழிவான செயல் என்று பலர் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து மெஹுல் பிரஜபதியை டிடி வங்கி பணியிலிருந்து நீக்கியது. இதையும் சேர்த்து அந்த மூன்றாம் நபர், “உணவு வங்கிக் கொள்ளைக்காரன் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்” என்று அப்டேட் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in