Published : 28 Apr 2018 01:27 PM
Last Updated : 28 Apr 2018 01:27 PM

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: எல்லையில் அமைதி குறித்து 2 -ம் நாள் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இருதரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக எல்லையில் அமைதியை நிலவச் செய்வது தொடர்பாக விரிவான விவாதிக்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்பு துறை அமைச்சர்கள் மாநாடு சீன தலைநகர் பெய்ஜிங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றனர்.

அப்போது, ஏப்ரல் 27, 28 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வூஹான் நகரில் சந்தித்து பேசுவார்கள் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அறிவித்தார்.

இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் சீனா சென்றார். நேற்று அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று 2வது நாள் உச்சி மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இருதரப்பு அதிகாரிகள் மட்டத்திலான விவாதம் நடைபெற்றது. டோக்லாம் நெருக்கடிக்கு பின், எல்லையில் இருநாட்டு ராணுவமும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது பற்றி இருதரப்பு ஆலோசனை நடைபெற்றது.

முன்னதாக, இன்று காலை மோடி மற்றும் ஜின்பிங் இருவரும் சீனாவில் புகழ் பெற்ற கிழக்கு ஏரியை சுற்றி வலம் வந்தனர். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் ஜின்பிங் அவருக்கு மதிய உணவு விருந்து அளிக்க உள்ளார். அதன்பின் அங்கிருந்து மோடி இந்தியாவுக்கு திரும்புகிறார்.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x