16 வயது சிறுவனை கைது செய்த பிரான்ஸ் போலீஸார்

16 வயது சிறுவனை கைது செய்த பிரான்ஸ் போலீஸார்
Updated on
1 min read

பாரிஸ்: எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களத்தில் உயிரை துறக்க விரும்புவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம்.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26-ம் தேதி தொடங்க உள்ளது.

இதில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளனர். செய்ன் ஆற்றின் கரையில் இந்த விழாவை கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக வழக்கத்தை விடவும் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது பிரான்ஸ் அரசு. பாதுகாப்பில் பங்களிக்க சுமார் 45 அயல் நாடுகளின் உதவியை பிரான்ஸ் அரசு கேட்டுள்ளதாகவும் தகவல்.

தொடக்க விழாவை பாதுகாப்புடன் நடத்துவதில் தங்கள் அரசு உறுதியாக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மாற்று திட்டங்களும் தங்கள் வசம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில்தான் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன், தனது டெலிகிராம் பதிவில் ‘ஒலிம்பிக் விளையாட்டு போட்டி களத்தில் உயிரை துறக்க விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். அதையடுத்து செவ்வாய்க்கிழமை அவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது அவரிடம், இதன் பின்னணியில் தீவிரவாத சதி ஏதேனும் உள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in