Published : 04 Apr 2018 09:42 AM
Last Updated : 04 Apr 2018 09:42 AM
ஜம்மு காஷ்மீர் நிலவரம் மிகவும் கவலை அளிப்பதாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள் ளார்.
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மற்றும் சோபியான் மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 13 தீவிரவாதிகள், 3 வீரர்கள், 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், நேற்று முன்தினம் வழக்கமான தினசரி செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து ஐநா பொதுச் செயலாளர் மிகவும் கவலை அடைந்துள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது உறுப்பு நாடுகளின் கடமை என அவர் நினைவூட்டினார்.
காசாவாக (பாலஸ்தீனம்) இருந்தாலும், காஷ்மீராக இருந்தாலும் அல்லது யேமனாக இருந்தாலும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட அரசின் கடமை. இதுதான் இந்த அமைப்பின் (ஐநா) அடிப்படை கொள்கை என தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்களுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் உலகின் எந்தப் பகுதியில் கொல்லப்பட்டாலும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்தார். இவ்வாறு துஜாரிக் தெரிவித்தார்.
அதேநேரம், காஷ்மீர் பிரச்சினை குறித்து இப்போதைக்கு விவாதிக்கும் திட்டம் இல்லை என ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஏப்ரல் மாதத்துக்கான தலைவர் குஸ்தாவோ மெசா-குவாத்ரா தெரிவித்துள்ளார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT