Published : 19 Apr 2024 06:52 AM
Last Updated : 19 Apr 2024 06:52 AM

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் மீட்பு பணிகள் தீவிரம்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாயன்று பெய்த மிக கனமழையால் நகரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. 24 மணிநேரத்தில் 142 மி.மீ மழை பெய்துள்ளதாக துபாய் வானிலை மையம் தெரிவித்தது.

குறிப்பாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சராசரியாக 94.7 மி.மீ. மழை பெய்தது. இதனால், விமான ஓடுபாதை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நாட்டின் பிற பகுதிகளில் இதைவிட அதிகமாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசு செய்தி நிறுவனமான டபிள்யூஏஎம், “இது ஒரு வரலாற்று வானிலை நிகழ்வு. 1949-லிருந்து சேகரிக்க தொடங்கிய தரவுகளை இந்த மழைப்பொழிவு விஞ்சியுள்ளது" என்று கூறியுள்ளது.

அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூற்றாண்டு காணாத மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளோம். மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இயல்பு நிலைக்கு திரும்ப சவாலான பணிகளை எதிர்நோக்கியுள்ளோம். பெருமழையால் ஏற்பட்ட உள்கட்டமைப்பு பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிகள் விரைவாக செயல்படுவார்கள். இந்த இயற்கைஇடர்பாடு மக்களின் ஒற்றுமை, அன்பை, அக்கறையை ஒவ்வொரு மூலையிலும் வெளிக்காட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்களை தேடும் பணியில் மக்கள் நேற்று மும்முரமாக ஈடுபட்டனர். அடுத்த வாரம் வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வெள்ளத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

சர்வதேச விமான நிலையத்தில் முனையம் 1-ல் விமானங்கள் பறப்பதற்கு நேற்று அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், விமான சேவையில் காணப்பட்ட தாமதம் பல்வேறு இடையூறுகளுக்கு வழிவகுத்தது. எனவே, முன்பதிவு உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே பயணிகள் முனையத்துக்கு வருமாறு விமான நிலையத்தின் தரப்பில் எக்ஸ் பதிவில் அறிவுறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x