Published : 02 Aug 2014 11:18 AM
Last Updated : 02 Aug 2014 11:18 AM
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி, 729 பேர் உயிரை பலி கொண்டுள்ள, எபோலா விஷத் தொற்றுநோயை தடுக்க உலகத் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று அமெரிக்க- ஆப்ரிக்க மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
ஆப்பிரிக்க நாடான கினியாவில் இந்த வருட துவக்கத்தில் பரவ துவங்கிய, எபோலா விஷத் தொற்றுநோய் தற்போது லைபீரியா, சியரா லியோனிலும் பரவி அங்குள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆப்பிரிக்க நாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களை அந்த அரசு திரும்ப பெற்றுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க- ஆப்பிரிக்க தலைவர்கள் உடனான சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, "எபோலா தொற்று வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க வேண்டிய கடமை உலக சுகாதார மையத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளுக்கும் உள்ளது. இன்னும் பெரிய அளவில் இந்த வைரஸ் பரவுவதிலிருந்து இதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த திரும்ப பெற்றுள்ள அமெரிக்க வீரர்கள் அனைவருக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது.
உலக சுகாதார மையம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த ஆண்டு மட்டும் எபோலா தொற்று நோய்க்கு 57 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்தது. இதுவரையில் லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 729 பேரை இந்த நோய் பலி கொண்டுள்ளது.
இந்நோய் மேலும் மோசமாகாமல் இருப்பதைத் தடுக்க பல புதிய மருத்துவமுறைகள் மேற்கொண்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்களில் உடல்நிலையில் எவ்வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை என்பதே அச்சத்திற்கு வலுசேர்ப்பதாக உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT