Published : 10 Feb 2024 12:37 PM
Last Updated : 10 Feb 2024 12:37 PM

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி | நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ இடையே உடன்பாடு

நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த 8-ம் தேதி அந்நாட்டின் தேசிய அவைக்கும்(நாடாளுமன்றம்), மகாண அவைகளுக்கும்(சட்டப்பேரவை) தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெற்றதால் வாக்கு எண்ணும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி தேசிய அவையின் மொத்தமுள்ள 266 இடங்களில், இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம லீக்(நவாஸ்) கட்சி 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

நவாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் ஆசிப் அலி சர்தாரி, பிலாவல் பூட்டோ ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பஞ்சாப் மாகாண தற்காலிக முதல்வர் முஷின் நக்வியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின்போது, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நவாஸ் ஷெரீப்பின் செய்தியை ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாகவும், அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மத்தியிலும், பஞ்சாபிலும் கூட்டணி ஆட்சி அமைப்பது என்றும், எந்தெந்த பதிவிகள் யார் யாருக்கு என்பது தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் முடிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x