Published : 08 Feb 2024 09:47 AM
Last Updated : 08 Feb 2024 09:47 AM

“அமெரிக்காவை பலவீனமான நாடாகப் பார்க்கிறது இந்தியா” - நிக்கி ஹேலி கருத்து

நிக்கி ஹேலி

வாஷிங்டன்: “அமெரிக்காவை பலவீனமாகப் பார்க்கிறது இந்தியா. அமெரிக்கர்கள் வழிநடத்துவார்கள் என அது நம்பவிலை” என அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளார்களில் ஒருவரான நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகப் பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நிக்கி ஹேலி நேற்று (புதன்கிழமை) ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி கவனம் பெற்றுள்ளது. அவருடைய பேட்டியில் இருந்து.. “அமெரிக்காவை பலவீனமான நாடாகப் பார்க்கிறது இந்தியா. ஜனநாயகக் கட்சி ஆட்சியின் கீழ் அமெரிக்கர்கள் உலகை வழிநடத்துவார்கள் என அது நம்பவிலை. அமெரிக்காவுடன் நட்புறவைப் பேண இந்தியா விரும்பினாலும் கூட இப்போதைக்கு அமெரிக்கா மீது அதற்கு பெரும் நம்பிக்கையில்லை. ஆகையால், நடப்பு உலகளாவிய சூழலைக் கருதி இந்தியா புத்திசாலித்தனமான நகர்வுகளை மேற்கொள்கிறது. அதனாலேயே அமெரிக்காவைவிட ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகிறது.

நான் இந்தியாவை அறிவேன். பிரதமர் மோடியிடம் நான் நேரடியாகவே பேசியிருக்கிறேன். இந்தியாவுக்கு அமெரிக்காவுடனான நட்புறவில் விருப்பம் தான் ஆனாலும் அவர்கள் இப்போதைக்கு அமெரிக்கா மீது சந்தேகத்தில் உள்ளனர். நாங்கள் பலவீனமாக இருப்பதாக உணர்கிறார்கள். அதனாலேயே ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகின்றனர். அங்கிருந்துதான் அவர்களுக்கு நிறைய ராணுவத் தளவாடங்கள் கிடைக்கின்றன.

இந்தச் சூழலில் நாங்கள் எப்போது நம்பிக்கையை மீட்டெடுக்கிறோமோ அப்போது இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா போன்ற நண்பர்கள் எங்களிடம் வருவார்கள். சீனா மீதான சார்பை குறைக்க ஜப்பான், இந்தியா பெருமுயற்சிகள் எடுத்துள்ளன. இத்தகைய சூழலில், அமெரிக்கா தனது கூட்டணி உறவுகளை வலுவாகக் கட்டமைக்கும் காலம். குடியரசுக் கட்சி அதனை மீட்டெடுக்கும்.

சீனா பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தச் சூழலில் அவர்கள் அமெரிக்காவுடன் போருக்கு ஆயத்தமாகி வருகிறார்கள், அது அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு” என்றார். இந்தியாவைப் பற்றிய நிக்கி ஹேலியின் பார்வை கவனம் பெற்றுள்ளது,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x