Published : 19 Feb 2018 09:36 AM
Last Updated : 19 Feb 2018 09:36 AM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தனது மூன்றாவது திருமணத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இம்ரான் கானுக்கும் அவரது ஆன்மிக வழிகாட்டியான புஷ்ரா மனேகாவுக்கும் இடையே காதல் நிலவுவதாக ஊடகங்களில் பேசப்பட்டது. இதனை இம்ரான் மறுத்துவந்தார்.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இம்ரான் கானும் புஷ்ராவும் திருமணம் செய்து கொண்டனர்.
இத்தகவலை பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். "திருமணம் என்பது இரு இதயங்கள் இணையும் பந்தம். இம்ரான் கான் திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துகிறேன்" என அவர் ட்வீட் செய்துள்ளார்.
திருமணத்துக்குப் பிந்தைய விருந்து இன்னும் சில தினங்களில் எளிமையான முறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் திருமண வைபவத்தில் அவரது சகோதரிகள் யாருமே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு திருமணங்கள்..
இம்ரான் கான் கடந்த 1995-ல் பிரிட்டன் நாட்டின் கோடீஸ்வரரின் மகள் ஜெமீமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகளுக்குப் பின் அவரை விவாகரத்து செய்துவிட்டார். அந்தத் திருமணத்தின் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பின்னர் பாகிஸ்தான் டிவி தொகுப்பாளினி ரெஹ்மான் கானை கடந்த 2015-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்து கொண்டார். 10 மாதங்களிலேயே அந்த திருமணம் முறிந்து விவாகரத்து நடந்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.
மனேகாவிடம் ஆரம்ப காலத்தில் ஆன்மிக சிந்தனைகளைப் பெறவே இம்ரான் கான் சென்றுவந்தார். இம்ரான் கானின் அரசியல் கட்சி தொடர்பாக மனேகா கூறிய சில கணிப்புகள் பலிக்கவே இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், புஷ்ரா அவரது முதல் கணவரை விவாகரத்து செய்தார். முதல் கணவர் மூலம் புஷ்ராவுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் இம்ரானை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். புஷ்ராவுக்கு 40 வயதாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT