வடமேற்கு சீனாவில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம்: சுமார் 100 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

வடமேற்கு சீனாவில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம்: சுமார் 100 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
Updated on
1 min read

பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல்.

திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையிலும், சேதம் மற்றும் இடிந்துள்ள காட்சிகள் பதிவாகி உள்ளன. மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in