Published : 04 Jan 2018 12:56 PM
Last Updated : 04 Jan 2018 12:56 PM
ட்ரம்பின் அணுஆயுத பொத்தான் மிரட்டல் ட்வீட் தங்களது விதிமுறைகளை மீறுவதாக இல்லை என்று ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது.
புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ‘‘வடகொரியா அணுஆயுத சோதனைகளை முழுமையாக நடத்தி விட்டது. அமெரிக்காவின் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தும் அணு ஆயுத பொத்தான் என் மேசை மீது எப்போதும் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், " உணவு பொருளுக்குத் திண்டாடி வரும் வடகொரியாவுக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கள். என்னிடமும் அணுஆயுத பொத்தான் இருக்கிறது. ஆனால், கிம்மிடம் இருப்பதை விட, என்னிடம் இருப்பது மிகப் பெரியது, சக்தி வாய்ந்தது. அந்தப் பொத்தான் நன்றாக வேலையும் செய்கிறது. இதை கிம்முக்கு சொல்லுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆன்லைன் துஷ்பிரயோகம், வெறுப்பு பேச்சு, வன்முறை அச்சுறுத்தல்கள் போன்ற ட்வீட்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை ட்விட்டர் அமல்படுத்தியது.
அதன்படி பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் ஒரு குழு அல்லது தனி நபருக்கு ட்விட்டரில் மிரட்டல் விடுக்க கூடாது போன்ற விதிமுறைகள் அதில் உள்ளடங்கியுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு வடகொரியாவுடன் அணுஆயுத போரை தூண்டும் ட்ரம்பின் ட்வீட்டை ஏன் ட்விட்டர் நிர்வாகம் தடுக்கவில்லை என்று ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ட்விட்டர் தற்போது ட்விட்டர் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் "ட்ரம்பின் ட்வீட்டில் எந்த வன்முறையும், விதிமுறை மீறல்களும் இல்லை" என்று கூறியுள்ளது.
மேலும் சில ட்வீட்களை நீங்கள் தனிப்படுத்தி பார்த்தால் அது வெறுத்தக்க தோரணையில் இருக்கும் ஆனால் அதே ட்வீட்டை உரையாடல் கலந்து பார்த்தீர்கள் என்றால் அது வெறுத்தக்கதாக இருக்காது என்றும் கூறியுள்ளது.
அதுமட்டுமில்லாது ட்வீட்டரின் விதிமுறைகள் ட்ரம்புக்கு பொருந்தாது. ட்ரம்ப் தனது ட்வீட்களில் அவரது செய்திகளை தெரிவிக்கிறார். இதே விலக்கை ட்விட்டர் சமீபத்தில் அரசு மற்றும் ராணுவ கணக்குகளுக்கு வழங்கியுள்ளதாக டெக்க்ரஞ்ச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT