

நைஜீரியாவில் இரு சமூக அமைப்புகளுக்கு இடையே நடந்த வன்முறையில் 70 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், "நைஜீரியாவின் வடமேற்கு, தென் கிழக்கு பகுதிகளில் கால் நடை வளர்ப்பு சமூகத்துக்கு, வேளாண் சமூகத்துக்கு கடந்த சில மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது. இவ்வாரத்தில் ஏற்பட்ட மோதலில் 70 பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது.
வன்முறை சம்பங்களை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, "வன்முறையாளர்கள் ஒவ்வொரு வீடாக நுழைந்து துப்பாக்கியால் சுட்டார்கள், அவர்கள் என்னுடன் பணிபுரிந்தவர்களையும், எனது அக்கப்பக்கத்தினரையும் சுட்டுக் கொன்றார்கள்"என்றார்.
தொடர்ந்து வன்முறை பரவாமலிருக்க வன்முறை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்கள் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், இந்த வன்முறை சம்பவங்கள் அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.