Published : 22 Jul 2014 10:00 AM
Last Updated : 22 Jul 2014 10:00 AM

வனப்பொருள்கள் கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்தும் ‘ஆப்’ - டிராபிக் அமைப்பு வெளியிட்டது

உலகளாவிய அளவில் நடக்கும் சட்டவிரோத வனப் பொருட்கள் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான டிராஃபிக் (TRAFFIC) மற்றும் ஆஸ்திரேலியாவின் டாராங்கோ வனப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து சட்ட விரோத வனப் பொருட்கள் சந்தையை கட்டுப்படுத்தும் வகையில் மொபைல் போன்களில் பயன்படுத்தும் புதிய செயலியை (App) கண்டுபிடித்துள்ளன. வனப் பொருட்களின் கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் செயலி இதுவாகும்.

உலகமும் முழுவதும் சட்ட விரோதமாக வனப் பொருட்கள் கடத்தல் தொழில் நடந்துவருகிறது. இதில் மண்ணுளி பாம்பு தொடங்கி யானை வரை வேட்டையாடப்படுகின்றன. வனவிலங்கு வேட்டையைக் கட்டுப்படுத்த டிராஃபிக் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா உட்பட சுமார் 180 நாடுகள் டிராஃபிக்கில் உறுப்பினர்களாக இருக்கின்றன.

தற்போது டிராஃபிக் உருவாக்கியிருக்கும் செயலிக்கு கானுயிர் சாட்சியம் (Wildlife Witness) என்று பெயரிடப்பட்டுள்ளது. கீழ்காணும் உரலியில் இதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

>itunes.apple.com/us/app/wildlife witness/id738897823?mt=8

இந்த செயலி குறித்து டிராஃபிக்கின் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிராந்திய இயக்குநர் கிறிஸ் ஷெப்பர்டு கூறும்போது, “ஸ்மார்ட் போன்களில் இதனை மிக எளிமையான முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்துகொண்ட பிறகு நீங்கள் செல்லும் இடங்களில் காணக்கிடைக்கும் சட்டவிரோத வனப் பொருட்கள் விற்பனை, விலங்குகள், பறவைகள் கடத்தல், வேட்டை போன்ற விஷயங்களை மொபைல் போனில் படம் எடுத்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்தால் அது அப்படியே டிராஃபிக் அமைப்புக்கு வந்துவிடும்.

பதிவேற்றம் செய்யும்போதே அது எந்த வகையான வனப் பொருள், இடம், என்ன வகை உயிரினம் உள்ளிட்ட விவரங்களை இணைக்க செயலியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்களைக் கொண்டு டிராஃபிக் அமைப்பு தனது தரவுத் தொகுப்பு (Data base) கட்டுமானத்தை மேலும் விரிவானதாக்க இயலும்.

அதன் மூலம் அந்தந்த நாடுகளின் சட்டப்பூர்வமான அமைப்புகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல்களை அனுப்பி சட்ட விரோத வனப் பொருட்கள் சந்தையை கட்டுப்படுத்த முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மக்கள், குறிப்பாக கானுயிர் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் இதனை பதிவிறக்கம் செய்து தகவல்களை அளிப்பார்கள் என்று நம்புகிறோம். முதல்கட்டமாக ஐ போன்களில் இதனை பயன்படுத்தலாம். சில நாட்களில் ஆண்டிராய்டு போனில் பயன்படுத்தும் வகையில் செயலி வெளியிடப்படும். இதனை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்” என்றார்.

மேலும் மேற்கண்ட செயலியில் வனப் பாதுகாப்பு மற்றும் உலகில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் கிடைக்கப் பெறலாம். வோடா போன் ஃபவுண்டேஷன் அமைப்பு இந்த செயலியை உருவாக்குவதில் உதவி செய்ததாக டிராஃபிக் அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x