Published : 11 Nov 2023 08:15 AM
Last Updated : 11 Nov 2023 08:15 AM

பிணை கைதிகளை விடுவிக்க பாலஸ்தீன குழு நிபந்தனை

ஜெருசலேம்: தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி நடத்திய திடீர் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின்போது இஸ்ரேலில் இருந்து சுமார் 240 பேரை காசாவில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றன.

இவர்களில் பெரும்பாலானோர் ஹமாஸ் பிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஹமாஸுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் இஸ்லாமிக் ஜிகாத் என்ற சிறிய ஆயுதக்குழு தங்களிடம் 30 பிணைக் கைதிகள் இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்தது.

இந்நிலையில் இஸ்லாமிக் ஜிகாத் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மூதாட்டி ஒருவரையும் ஒரு சிறுவனையும் காணமுடிகிறது. “எங்கள் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் மனிதாபிமான அடிப்படையிலும் மருத்துவ காரணங்களுக்காகவும் இருவரையும் விடுவிக்க தயாராக இருக்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அந்த மூதாட்டி பேசுகையில், “எனக்கு குழந்தைகள் நினைவாகவே உள்ளது. நான் உங்களை அடுத்த வாரம் சந்திப்பேன் என நம்புகிறேன். நாங்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம். நீங்களும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். பிணைக் கைதிகளை படம் பிடித்து காசா தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள 3-வது வீடியோ இதுவாகும். இவர்கள் இதுவரை 4 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளனர். கடைசியாக 85 வயது மற்றும் 79 வயதுடைய இரு மூதாட்டிகள் கடந்த மாதம் 23-ம் தேதி இஸ்ரேல் திரும்பினர்.

இந்நிலையில் இஸ்லாமிக் ஜிகாத் வெளியிட்டுள்ள இந்த வீடியோ குறித்து இஸ்ரேல் அரசு இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x