Published : 30 Jan 2018 10:31 AM
Last Updated : 30 Jan 2018 10:31 AM

சீனா-பாக். பொருளாதார மண்டலம்: இந்தியாவுடன் பேச்சு நடத்த தயார்: சீனா அறிவிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா - பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் (சிபிஇசி) அமைக்கப்படும் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று சீனா அறிவித்துள்ளது.

பாகிஸ்தான், சீனா இடையே சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தை சீனா அமைத்து வருகிறது. இது பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தையும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கிறது. இந்த பொருளாதார மண்டலமானது, இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி வழியாக செல்கிறது. எனவே இந்தத் திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுன்யிங்சைட் கூறும்போது, “இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இது அமைகிறது. சிபிஇசி மண்டலம் அமைப்பதில் இந்தியாவுடன் சீனாவுக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்த விஷயத்தில் எங்களது நிலையை இந்தியாவிடம் தெரிவிக்க தயாராக இருக்கிறோம்.

இதற்காக பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயார். பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க சீனா விரும்புகிறது. சிபிஇசி திட்ட கருத்து வேறுபாடுகளால் தேசத்தின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதில் சீனா உறுதியாக இருக்கிறது. இரு நாட்டு நலன்களையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவிக்கிறோம். இந்தத் திட்டத்தால் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நேர்மையுடனும், பரஸ்பர மரியாதையின் மூலமாகவும் தீர்க்கலாம்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x