Published : 05 Nov 2023 07:23 PM
Last Updated : 05 Nov 2023 07:23 PM

மேற்கு கடற்கரைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் திடீர் விஜயம்: பாலஸ்தீன அதிபர் அப்பாஸுடன் சந்திப்பு

பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன்

காசா: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் செய்தார். பின்னர் அவர் பாலஸ்தீன அதிபர் மஹுமுத் அப்பாஸை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது காசா பகுதியில் இஸ்ரேஸ் நடத்திய இனப்படுகொலைகள் குறித்து அப்பாஸ், பிளிங்கனிடம் விவரித்தார். இந்தநிலையில் காசாவாசிகள் கட்டாயமாக வெளியேற்றப்படக்கூடாது என்று அமெரிக்க அமைச்சர் பிளிங்கன், பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் தெரிவித்தார். மேலும் இருவரும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அதித வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து விவாதித்தனர் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்திவ் மில்லர் தெரிவித்தார்.

இஸ்ரேல் அமைச்சரின் பேச்சு: இதனிடையே ஹமாஸ் தீவிரவாத குழுவுடன் நடந்து வரும் போரில் காசா பகுதியில் அணுகுண்டு வீசுவதுதான் இஸ்ரேலின் விருப்பம் என்று அந்நாட்டின் அமைச்சர் அமிசாய் எலியாகு வானொலி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

பிரதமரின் எதிர்வினையும்: எலியாகுவின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எலியாகுவின் பேச்சு அடிப்படை உண்மை இல்லாதவை. அப்பாவிகளுக்கு தீங்கு செய்யாமல், சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்ரேலும் ஐடிஎஃப்-ம் செயல்படுகின்றன. எங்களின் இறுதி வெற்றி வரை நாங்கள் அதைத் தொடருவோம் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்: எலியாகுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான யார் லாபிட், பொறுப்பற்ற அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள எலியாகு,"மூளையுள்ள எவருக்கும் அந்தப் பேச்சு ஒரு உருவகம் என்பது புரியும்" என்று தெரிவித்துள்ளார்.

யாருடைய கரங்களும் சுத்தமில்லை: இந்தநிலையில் கடந்த மாதத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை கண்டித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, "இத்தகைய கொடூரமான தாக்குதலை எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாது என்றார். மேலும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை சுட்டிக்காட்டிய ஒபாமா, யாருடைய கரங்களும் சுத்தமில்லை" என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், இஸ்ரேல் -ஹமாஸ் போர் ஞாயிற்றுக்கிழமை 30-வது நாளை எட்டியுள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி தாக்குதல் தொடங்கியது முதல் பாலஸ்தீன பகுதியில் இதுவரை 9,770 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 4,800 பேர் குழந்தைகள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x