Published : 01 Nov 2023 03:37 PM
Last Updated : 01 Nov 2023 03:37 PM

காசா அப்டேட் | ரஃபா எல்லை முதல்முறையாக திறப்பு; இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டித்தது பொலிவியா

காசா: இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் காயமடைந்தவர்கள் எகிப்தில் சிகிச்சை பெறும்விதமாக ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காசா மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி, இஸ்ரேல் உடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது.

காசா - எகிப்து எல்லையான ரஃபா கிராசிங் பார்டர், போரில் காயமடைந்தவர்கள் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்விதமாக திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல் முறையாக திறக்கப்படுவது இப்போதே. அதன்படி, போரில் காயமடைந்த பாலஸ்தீனியர்கள் தவிர 500 வெளிநாட்டினர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியர்களும் ரஃபா பார்டர் வழியாக எல்லையை கடந்து வருகின்றனர்.

300 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிசெய்துள்ளது. காசாவில் தரைவழித் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் ராணுவம் சந்தித்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான இழப்பு இதுவாகும். இதன்மூலம் அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 320-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. காசா மீது தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேலுக்கு எதிராக கஸ்ஸாம் படை மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் கடும் எதிர்தாக்குதலை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.

பிணைக் கைதிகள் குறித்து WHO கவலை: ஹமாஸ் குழுவால் கடத்திவரப்பட்ட பிணைக் கைதிகளின் நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலைத் தெரிவித்துள்ளார். "பிணைக் கைதிகளாக கடத்தி வரப்பட்டுள்ள குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களை உடனடியாக விடுவிக்க மீண்டுமொரு முறை WHO கோரிக்கை வைக்கிறது" என டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

11 ஆயிரம் இலக்குகள்மீது தாக்குதல்: காசாவில் ஹமாஸின் 11,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. "போர் தொடங்கியதில் இந்த மூன்று வார காலத்தில் காசாவில் ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுக்குச் சொந்தமான 11,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம்" என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டித்த பொலிவியா: காசா மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி, இஸ்ரேல் உடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்துள்ள பொலிவியா உனடியாக போர் நிறுத்தம் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. போர் நிறுத்தப்படும்வரை இஸ்ரேல் உடன் எந்த உறவும் இருக்காது எனவும் பொலிவியா அரசு அறிவித்துள்ளது. இதேபோல், காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கொலம்பியா மற்றும் சிலியும் இஸ்ரேல் நாட்டுக்கான தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, "இஸ்ரேல் உடனான தூதரக உறவுகளை துண்டிக்கும் பொலிவியாவின் முடிவு, தீவிரவாதத்துக்கு முன் சரணடைவது போல் ஆகும். இந்த நடவடிக்கையின் மூலம், பொலிவிய அரசாங்கம் ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் தன்னை இணைத்துகொள்கிறது" என்று இஸ்ரேல் அரசின் செய்தித் தொடர்பாளர் லயர் ஹையாட் விமர்சித்துள்ளார்.

மீண்டும் முடங்கியது இணையம்: காசாவில் கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக தகவல் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன என்று பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனமான பால்டெல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம் (பால்டெல்) தனது எக்ஸ் தளத்தில், "காசாவில் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதை மக்களுக்கு அறிவிப்பதில் வருந்துகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக மீண்டும் இதுமாதிரி நடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பல மணி நேரங்கள் ஆகியுள்ள நிலையில், இத்தையாக செயல்களால் தங்களின் பணி கடுமையாக பாதிக்கப்படுவதாக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

‘இது இன அழிப்பு’ - இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று (செவ்வாய்) காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். மாறி மாறி இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதில், இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், மனிதாபிமான நெருக்கடியைபம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் நீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இஸ்ரேல் போரை கைவிடுதாக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தப் போரில் காசாவில் 8,525 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதேபோல் 21,543 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,405 பேர் உயிரிழந்துள்ளனர். 5,431 பேர் காயமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x