Published : 03 Jan 2018 04:14 PM
Last Updated : 03 Jan 2018 04:14 PM

எச்1பி விசா நீட்டிப்புக்கு தடை: இந்திய ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில், எச்1பி விசா நீட்டிப்புக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிய வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க உதவும் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், அது வரை எச்1பி விசாவை நீட்டிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு தடை விதித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்1பி விசாவில் முறைகேடு செய்வதை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி, உயர் கல்வி கற்கவும், பணியாற்றவும் எச்1பி விசா வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அங்கு நிரந்தரமாக தங்கும் கிரின்கார்டு கிடைக்கும் வரை இந்த விசாவை நீட்டித்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும். இந்தியாவில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் இந்த விசாவை பயன்படுத்தியே அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர். அமெரிக்கா வழங்கும் மொத்த எச்1பி விசாவில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x