Published : 14 Oct 2023 01:38 PM
Last Updated : 14 Oct 2023 01:38 PM

''வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தளபதி உயிரிழப்பு'' - இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவிப்பு

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இடிந்து விழுந்த காசா நகர கட்டிடம்

டெல் அவிவ்: வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தளபதி முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் விமானப்படைத் தலைமையகத்தை குறி வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பின் வான்வழித் தக்குதலுக்கான தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரவு நேர வான்வழித் தாக்குதலில் இந்த தலைமையகம் அழித்தொழிக்கப்பட்டது. இதில், ஹமாஸ் விமானப்படைத் தளபதி முராத் அபு முராத் கொல்லப்பட்டார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலை வழி நடத்தியவர் இவர். இந்த தலைமையகத்தில் இருந்தவாறுதான் ஹமாஸ் தனது வான்வழித் தாக்குதலை நிர்வகித்து வந்தது.

ஹமாஸ்-ன் தளபதிகள் பதுங்கி இருந்த நுக்பா உள்பட 12க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அந்த தளபதிகள்தான், கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள். இஸ்ரேலிய தரைப்படையும், விமானப்படையும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் வடக்கே, லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதக் குழுவை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்கள் அடையாளம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அதோடு, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்கை குறிவைத்தும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x