Published : 11 Oct 2023 10:05 AM
Last Updated : 11 Oct 2023 10:05 AM

''காசா குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை'' - இஸ்ரேல் ராணுவம் விளக்கம்

இஸ்ரேல் தாக்குதலால் நொறுங்கிய காசா பகுதி கட்டிடங்கள்

டெல் அவிவ்: காசாவில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள கட்டிடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடங்கி 4 நாட்கள் முடிந்து 5வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து அதன் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: "ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் 700 என்றும், 900 என்றும் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது. இது இறுதி எண் கிடையாது. ஏனெனில், இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2,700க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்.

காசாவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் பணியாற்றுவார்கள். அவர்களிடம் இஸ்ரேலிய மக்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலால் காசா எல்லையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். காசா எல்லையை சுற்றிலும் இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊடுருவல் நிகழாதவாறு தடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புப் பணியில் மூன்று லட்சம் வீரர்கள் இணைந்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் நொருங்கி விழுவது குறித்த வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியும். அவை பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள் அல்ல. குடியிருப்பு கட்டிடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களுக்கான இடமாகப் பயன்படுத்துவார்கள். அத்தகைய கட்டிடங்களைத்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழிக்கிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் இஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. எனினும், இதுவரை இந்த தாக்குதலால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காசா: காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளதாகவும், 4,250 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந்தவர்கள் காசா மருத்துவமனைகளில் குவிந்துவருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலேயே காசாவில் மருத்துவமனைகள் இருப்பதால், ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வரும்நிலையில் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பிடம் மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளது. இதற்கிடையே, போர் முடியும் வரை இஸ்ரேலிடம் இருந்து பணயக் கைதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் பயங்கரவாதக் குழு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x