Published : 06 Jan 2018 10:17 AM
Last Updated : 06 Jan 2018 10:17 AM

இந்த ஆட்டம் யாருக்காக..?

10,343 கி.மீ. என்ன இது...? வட கொரியா - அமெரிக்கா இடையிலான தூரம். ‘அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம்’ என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை எச்சரிக்கிறாரே.... 10,000 கி.மீ.க்கு அப்பால் இருக்கிற ஒரு நாட்டைத் தாக்குகிற அளவுக்கு வடகொரியாவுக்கு வல்லமை இருக்கிறதா...? முதலில், வடகொரியாவுக்கு அணு ஆற்றல், எப்படிக் கிடைத்தது?

கடந்த 2004-ம் ஆண்டு, பாகிஸ்தானின் புகழ்பெற்ற அணு விஞ்ஞானி அப்துல் காதர் கான் கைது செய்யப்பட்டார். அணு ஆயுதத் தயாரிப்புத் தொழில் நுட்பத்தை, வடகொரியாவுக்கு விற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சில ஆண்டுகள் வீட்டுச் சிறையில் இருந்த கான், 2009-ம் ஆண்டு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இடைப்பட்ட காலத்தில், 2006 அக்டோபர் 3-ம் தேதி முதன் முறையாக வடகொரியா அணு ஆயுதச் சோதனை நடத்தியது. இதன் பிறகு, 2009, 2013, 2016 (இரு முறை) மற்றும் 2017-ம் ஆண்டுகளில் என்று இதுவரை ஆறு முறை அணுகுண்டுச் சோதனை நடத்தி இருக்கிறது. இடையில் 2017 செப்டம்பரில், ஹைட்ரஜன் குண்டு சோதனையும் நடத்தப்பட்டதாக வடகொரிய அரசுத் தரப்பு கூறியது.

இதன் விளைவாக, கடந்த 2017 நவம்பர் 29 அன்று, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ‘ஹுவாசாங் -15' ஏவுகணையை சோதனை ஓட்டம் விட்டார். சுமார் ஒரு மணி நேரம் இது விண்ணில் பறந்தது. இதனால், 10,400 கி.மீ. தொலைவு பறக்க முடியும் என்று கூறப்படுகிறது. ‘இலக்கு’ - 10,343 கி.மீ. தாக்கும் திறன் - 10,400 கி.மீ. ‘பொத்தான்’ பேச்சு, இப்படித்தான் வந்தது. ஆனாலும் வட கொரியாவின் திறன் இன்னமும் சந்தேகத்தோடுதான் பார்க்கப் படுகிறது.

அணுகுண்டு, ஏவுகணை... எல்லாம் சரிதான். ஏவுகணையில் வைத்து செலுத்துவதற்கு ஏற்ற அளவில், அதன் அணுகுண்டு இல்லை என்கின்றனர் சிலர். இது நிசமாகவும் இருக்கலாம். அதனால்தான், ‘என்னுடைய பொத்தான், வேலை செய்யக் கூடியது’ என்கிறார் ட்ரம்ப். இவை எல்லாம், நம் கண்ணுக்குத் தெரிந்து நடந்து வரும் கூத்துகள்.

ஆனால், உலக அரசியல் - மகாபாரதக் கதை போன்றது. ஒவ்வொரு நாடு, ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின்னாலும் ஒரு கிளைக் கதை உண்டு. 1974, 1998-ல் இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்தியது. அமெரிக்கா, சீனா உள்ளிட நாடுகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. அணு ஆயுதம் வேண்டாம் என்பதல்ல கொள்கை; ‘எங்களைத் தவிர வேறு யாரிடமும் இருக்கக் கூடாது’.

வெளியில் சொல்வது என்னவோ.... ‘உங்களுக்கு வயசு (பக்குவம்') பத்தாது..’ 1998-ல், இந்தியாவைத் தொடர்ந்து இரண்டே வாரங்களில், பாகிஸ்தானும் (மே 1998) அணு ஆயுத வல்லமையைப் பறை சாற்றியது. தெற்காசியப் பிராந்தியம், அணு ஆயுதங்களின் கேந்திரமாக மாறிப் போனது.

புத்தர் அவதரித்த, புத்த மதம் வேரூன்றி வளர்ந்த மண்டலம் - ஏன் இப்படி ஆனது...? இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக, சில நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் பொருளாதாரத் தடைகள் விதித்தனவே... அவை எல்லாம் என்னவாயிற்று..? அவை எல்லாம் எப்படி மறைந்து போயிற்று...?

அணு ஆயுதம்தான் மிக பயங்கரமான ஆயுதம் என்று கருதிக் கொண்டு இருக்கிறோம். அதை விடவும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்று, உலகத் தலைவர்களிடம், ஆள்கிறவர்களிடம் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்... ஆகியோரை இந்த ஆயுதம்தான் காப்பாற்றுகிறது. இதுதான் அவர்களின் கரங்களுக்கு வலு சேர்க்கிறது. அணு ஆயுத அரசியலுக்குப் பின்னால் இருந்து இயக்குகிற அந்த ஆயுதம்..

( நாளையும் வரும் )

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x