Published : 07 Dec 2017 10:18 AM
Last Updated : 07 Dec 2017 10:18 AM
அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள், கொரிய தீபகற்பத்தில் நேற்று கடும் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க தென் கொரியா - ஜப்பான் - அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் போர் பயிற்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதில் அமெரிக்காவின் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தும் பி-1பி ரக போர் விமானங்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டன.
அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த எப்-35 மற்றும் எப்-16 ரக அதிநவீன போர் விமானங்கள் ஒரே நேரத்தில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன. மேலும், தென் கொரியாவின் எப்-15கே மற்றும் கேஎப்-16 ரக போர் விமானங்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டன. இரு நாட்டு விமானங்களும் காங்வான் மாகாணப் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டதாக தென் கொரிய முப்படைத் தளபதி நேற்று தெரிவித்தார். இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை வரை நடக்கிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்தப் போர் பயிற்சிகளில் இருநாடுகளின் 230-க்கும் மேற்பட்ட விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது. இதன்மூலம் வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுஆயுதத் தாக்குதலை முறியடிக்க முடியும் என்று தென்கொரிய தளபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT