Published : 16 Jul 2014 10:00 AM
Last Updated : 16 Jul 2014 10:00 AM
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி தலைமையிடத்தை எங்கு அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. டெல்லியில் அமைக்க வேண்டும் என்று இந்தியாவும் ஷாங்காயில் அமைக்க வேண்டும் என்று சீனாவும் வலியுறுத்தியுள்ளன.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு பிரேசிலின் போர்டலிசா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரவுசப், தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக வங்கிக்குப் போட்டியாக பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் வளர்ச்சி வங்கியையும் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு இணையாக மினி ஐ.எம்.எப். அமைப்பையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ரூ.6,10,000 கோடி முதலீட்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைமையிடத்தை எங்கு அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. தலைமை அலுவலகம் அமைப்பதற்காக இந்தியத் தலைநகர் டெல்லி, சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காய், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் ஆகிய நகரங்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதில் டெல்லி, ஷாங்காங் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து இந்திய நிதித்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் வளர்ச்சி வங்கியின் தலைமையகம் தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என்று விரும்புகின்றன. டெல்லியில் அமைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
ஆங்கில மொழித்திறன், திறன் வாய்ந்த மனிதவளம் ஆகியவை இந்தியாவுக்கு சாதகமாக உள்ளன. மேலும் பூகோளரீதியில் பிரிக்ஸ் நாடுகளுக்கு நடுவில் இந்தியா அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்றார்.
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியைத் தொடங்குவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாநாட்டிலேயே வெளியிடப்பட உள்ளது. வங்கியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் முடிந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT