Published : 13 Dec 2017 05:09 PM
Last Updated : 13 Dec 2017 05:09 PM

ஜெருசலேம் விவகாரம்: மத்திய கிழக்கில் அமைதி திரும்பாது என பாலஸ்தீனம் எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் வரை மத்திய கிழக்கில் அமைதி திரும்பாது என அந்நாட்டின் அதிபர் முகமது அப்பாஸ் எச்சரித்துள்ளார்.

கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபுப் போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.

பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கூடி ஆலோசித்து வருகின்றன.

இந்தக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:

''இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயல் கண்டிக்கத்தக்கது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு விவகாரங்களில் தலையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அமெரிக்க நகரை அவரால் விட்டுக்கொடுக்க முடியுமா? ஜெருசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராக அங்கீகரிக்கும் வரை மத்திய கிழக்கில் அமைதியோ அல்லது ஸ்திரமான நிலையோ திரும்பாது'' எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x