Published : 28 Dec 2017 10:43 AM
Last Updated : 28 Dec 2017 10:43 AM

பெரு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் முன்னாள் அதிபர் புஜிமோரி

பெரு நாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு (79) அந்நாட்டு அரசு பொது மன்னிப்பு வழங்கிய நிலையில், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.

இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ காட்சி பதிவேற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையில் புஜிமோரி படுத்திருந்தபடி எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியில், “நான் ஆட்சியில் இருந்தபோது எனது செயல்பாட்டை ஒரு சாரார் வரவேற்ற போதிலும், மற்றொரு தரப்பினரின் நலனை புறக்கணித்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறி உள்ளார்.

1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த புஜிமோரி மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ, 2 தினங்களுக்கு முன்பு புஜிமோரிக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இதைக் கண்டித்து நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் புஜிமோரி மன்னிப்பு கோரியுள்ளார்.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x