Published : 17 Dec 2017 11:43 AM
Last Updated : 17 Dec 2017 11:43 AM
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுச் செயலாளர் ஜஹாங்கீர் தாரீன், வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பொதுச்செயலாளர் ஜஹாங்கீர் தாரீன் ஆகியோர் வெளிநாடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும் அந்தப் பணத்தின் மூலம் பாகிஸ்தானில் சொத்துகள் வாங்கியதாகவும் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவர் ஹனீப் அப்பாஸி 2016 நவம்பரில் இந்த வழக்கை தொடர்ந்தார். தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
இம்ரானுக்கு எதிரான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஜஹாங்கீர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர் வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ஜஹாங்கீர் நேற்று கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். பனாமா பேப்பர்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக முன்னாள் பிரதமர் நவாஸ் எம்.பி. மற்றும் பிரதமர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT