Published : 03 Dec 2017 09:09 AM
Last Updated : 03 Dec 2017 09:09 AM

உலக மசாலா: ஐயோ… என்ன ஒரு கொடுமையான சூழல்…

சீனாவைச் சேர்ந்த 14 வயது லீ ஸியாவோக்விங், அரிய வகை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 2014-ம் ஆண்டு இவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹுனான் மாகாணத்திலிருந்து மருத்துவம் பார்க்க புயாங் நகரத்துக்குச் சென்றனர். பரிசோதனையில் நோய் முற்றியது தெரிந்தது. உடனே பெய்ஜிங்குக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். மிகப் பெரிய கட்டியாக இருப்பதால், கீமோதெரபி கொடுத்து சிறியதாக்கினால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றார்கள் மருத்துவர்கள். அத்துடன் நிறைய செலவாகும் என்பதால், புயாங் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். பள்ளியிலிருந்து விடுமுறை வாங்கிக்கொண்டு, சில மாதங்களில் 5 முறை கீமோதெரபி எடுத்துக்கொண்டார் லீ. எதிர்பாராத விதமாக உடல்நிலை மோசமடைய, மீண்டும் பெய்ஜிங் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சேமிப்பு, சொத்துகள் என்று அனைத்தையும் கொடுத்து இதுவரை 20 முறை கீமோதெரபி அளித்திருக்கிறார்கள். மொத்தம் ரூ.28 லட்சம் செலவாகியிருக்கிறது. இதற்கு மேல் அவர்களுக்கு வசதி இல்லை. தாய், தந்தையின் கஷ்டத்தைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத லீ, தனக்கான சிகிச்சையைக் கைவிடும்படிக் கேட்கிறார். இதைக் கேட்டு லீயின் பெற்றோர் கதறி அழுகிறார்கள். “சக்திக்கு அதிகமாகவே செலவு செய்துவிட்டார்கள். இந்த 2 ஆண்டுகளில் எனக்காகவே வீட்டை விட்டு வந்துவிட்டார்கள். இன்னும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை வளர்க்க வேண்டும். எனக்காக மட்டும் இருவரும் படும் துயரங்களைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதனால் என் சிகிச்சையை நிறுத்தும்படிக் கேட்கிறேன். இனி அவர்களுக்கும் விற்பனை செய்ய ஒரு பொருளும் இல்லை” என்கிறார் லீ. இவர்கள் மூவரும் கண்ணீர் விடும் காட்சி, பார்ப்பவர்களைப் பதறவைக்கிறது. சில அறக்கட்டளைகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஐயோ… என்ன ஒரு கொடுமையான சூழல்…

இங்கிலாந்தைச் சேர்ந்த 70 வயது டிவோன் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பியபோது, வீட்டைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். 40 அடி நீளம் கொண்ட நகரக்கூடிய மொபைல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். “என் கணவரும் நான் வளர்த்த நாயும் இறந்த பிறகு, நான் தனியாக வசித்து வருகிறேன். வயதாவதால் என் பிள்ளைகள், நண்பர்கள் வீடுகளுக்கு அருகே வசிக்க நினைத்தேன். ஒரு இடத்தில் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு இடத்துக்குச் சென்றுவிடலாம் என்பதற்காக மொபைல் வீட்டை வாங்கினேன். ஆனால் வீட்டை வாங்கியதிலிருந்து என்னை யார் யாரோ மிரட்டிக்கொண்டே இருந்தனர். இவர்தான் என்று என்னால் ஒருவரைச் சொல்ல முடியவில்லை. இந்தப் பகுதியிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட நினைத்திருந்தேன். அதற்குள் வீட்டையே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஒரு இரவு முழுவதும் வீடின்றி கழித்தேன். இப்போது என் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன். என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. மொபைல் வீடுகளைப் பாதுகாக்கும் கவுன்சிலிடம் புகார் அளித்திருக்கிறேன்” என்கிறார் டிவோன்.

வீட்டையே எடுத்துட்டுப் போயிட்டாங்களே இந்தப் பாவிகள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x