Published : 08 Dec 2017 10:07 AM
Last Updated : 08 Dec 2017 10:07 AM

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கண்டனம்

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் வசமும் கிழக்கு ஜெருசலேம் ஜோர்டான் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. அதன்பிறகு 1967-ல் நடந்த அரபு போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. பின்னர் ஒட்டுமொத்த ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அந்த நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட்டன.

இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து டெல் அவிவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் விரைவில் ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நேற்று தெரிவித்தார்.

பிரிட்டன் எதிர்ப்பு

அமெரிக்காவின் முடிவுக்கு அதன் நட்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே கூறியபோது, “அமெரிக்காவின் முடிவால் மத்திய கிழக்கில் அமைதி முயற்சி பாதிக்கப்படும்” என்றார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய மூத்த தலைவர் பெட்ரிகோ கூறியபோது, அமெரிக்காவின் அறிவிப்பு கவலையளிக்கிறது என்றார். அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா, இராக் ஆகியவையும் ஜெருசலேம் விவகாரத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியபோது, அமெரிக்காவின் முடிவு கவலையளிக்கிறது என்றார். சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள தலையங்கத்தில், அதிபர் ட்ரம்ப் ஏதேச்சதிகாரத்துடன் செயல்படுகிறார். தனது செல்வாக்கை நிரூபிக்க வடகொரியா மீதும் அவர் ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரப்பில் நேரடியாக கருத்து தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியபோது, பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்கும், 3-ம் நாடு தலையீட்டை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்துள் ளார்.

இன்று ஐ.நா. கூட்டம்

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறியபோது, அமெரிக்காவின் அறிவிப்பு மிகுந்த வேதனையளிக்கிறது என்று தெரிவித்தார். இதனிடையே ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x