Published : 21 Dec 2017 10:28 AM
Last Updated : 21 Dec 2017 10:28 AM
‘‘தென் கொரியாவில் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் நடப்பதால், ஆண்டுதோறும் நடக்கும் போர் பயிற்சியை தள்ளி வைக்க வேண்டும்’’ என்று அமெரிக்காவுக்கு தென் கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை சமாளிக்க தென் கொரியாவுடன் இணைந்து ஆண்டுதோறும் அமெரிக்கா போர் பயிற்சிகளில் ஈடுபடுகிறது. இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபடும் கால கட்டங்களில், கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவும். வழக்கமாக பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை கூட நடைபெறும்.
இந்நிலையில், தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் பிப்ரவரி 9-ம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுகிறது. அதன்பின், மார்ச் 9-ம் தேதி ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதையடுத்து ஆண்டுதோறும் நடத்தப்படும் போர் பயிற்சிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு தென் கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தொலைக்காட்சி என்பிசி.க்கு தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அளித்த பேட்டியில் இந்த வேண்டுகோளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் மூன் தெரிவித்தார்.
குளிர்கால ஒலிம்பிக் நடைபெறும் இடம், வடகொரியா எல்லையில் இருந்து 80 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது. எனவே, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் போர் பயிற்சியும் மேற்கொண்டால், பதற்றம் அதிகரிக்கும் என்று தென் கொரியா கூறியுள்ளது.
இதற்கிடையில் குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியாவும் பங்கேற்று ‘அமைதி ஒலிம்பிக்காக’ மாற்ற வேண்டும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.- ஏஎப்பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT